Friday, 17th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் விவசாய நிலங்களில் மரம் நடும் விழா

அக்டோபர் 05, 2023 08:00

நாமக்கல்: ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில், நாமக்கல் அருகே ஆண்டாபுரம் கிராமத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தனியார் விவசாய நிலங்களில் மரக்கன்றுகள்  மரம் நடும் விழா நடைபெற்றது.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஈஷா காவேரி கூக்குரல் சார்பில், தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் 94 இடங்களில் உள்ள விவசாய நிலங்களில், 1,822 ஏக்கர் பரப்பளவில் மொத்தம் 1,59,918 மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதையொட்டி, நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகில் உள்ள ஆண்டாபுரம் கிராமத்தில் ஜெயபிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 15 ஏக்கர் விவசாய நிலத்தில் 3,000 எண்ணிக்கையில் விலை உயர்ந்த டிம்பர் மரங்கள் நடப்பட்டன. நாமக்கல் மாவட்டத்தில் விவசாயி நிலங்களில் மொத்தம் 7,500 மரக்கன்றுகள் நடப்பட்டன.

ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம், மரம் சார்ந்த வேளாண்மை செய்ய விவசாயிகளை ஊக்குவித்து வருகிறது. இதுவரை ஈஷா சுமார் 9 கோடி மரக் கன்றுகளை விவசாயிகளுக்கு வினியோகித்துள்ளது. கடந்த ஆண்டு தமிழகத்தில் மட்டும் விவசாய நிலங்களில் 1,01,42,331 மரங்கள் நடப்பட்டுள்ளது.

 இந்த ஆண்டு தமிழகத்தில் 1.10 கோடி மரங்கள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 45,82,760 மரங்கள் நடப்பட்டுள்ளது. காவேரி ஆற்றில் நீர் வரத்து நிலையில்லாமலும், குறைந்தும் வரும் இந்த காலகட்டத்தில் காவேரி ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் மரங்கள் நடுவது மிகவும் அவசியமாக உள்ளது.

எனவே தமிழக மற்றும் கர்நாடக விவசாய நிலங்களில் 242 கோடி மரங்களை நட ஈஷா திட்டமிட்டுள்ளது. இதற்காக மரம் சார்ந்த விவசாயத்தை காவேரி கூக்குரல் முன்னெடுத்து வருகிறது.

மரம் சார்ந்த விவசாயம் என்பது பலன் தரக்கூடிய விலை மதிப்பு மிக்க மரங்களை விவசாய நிலங்களின் வேலி மற்றும் வரப்பு ஒரங்களில் வளர்ப்பதாகும். தேக்கு, மலைவேம்பு, கருமருது, வேங்கை, மஞ்சள் கடம்பு, சந்தனம், செஞ்சந்தனம், குமிழ், மகாகனி போன்ற மரங்கள் இதற்கு உகந்தவை.

மேலும் வாய்ப்புள்ளவர்கள் நிலம் முழுவதும் டிம்பர் மரங்கள் நடவு செய்து இடையில் ஊடுபயிர் மற்றும் மிளகு போன்ற நறுமணப் பயிர்களையும் சாகுபடி செய்து தொடர் வருமானம் ஈட்டலாம்.

இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள 50 ஈஷா நர்சரிகள் மூலம் தரமான மரக்கன்றுகள் 3 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. தற்போது மழைக் காலத்திற்கு தேவையான நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகத்திற்கு தயாராக உள்ளது.

மேலும் மரம் சார்ந்த விவசாயம் குறித்த தொழில்நுட்ப ஆலோசனைகளை தமிழம் முழுவதும் உள்ள களப்பணியாளர்கள் விவசாய நிலங்களுக்கு நேரடியாகச் சென்று வழங்கி வருகிறார்கள்.

மரம் சார்ந்த விவசாயம் குறித்த பயிற்சிகளையும் காவேரி கூக்குரல் இயக்கம் நடத்தி வருகிறது. வரும் அக்டோபர் 15ந் தேதி கோடிகளை கொடுக்கும் சந்தனம் என்ற தலைப்பில், டிம்பர் மரங்கள் சாகுபடி குறித்த கருத்தரங்கை பல்லடத்தில் உள்ள சந்தனமரப் பண்ணையில் காவேரி கூக்குரல் நடத்த உள்ளது.

கருந்தரங்கில் கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளாவை சேர்ந்த முன்னோடி விவசாயிகளும், விஞ்ஞானிகளும் பங்கேற்று சந்தனம் மற்றும் மானாவாரி மரவளர்ப்பு குறித்து பேச உள்ளனர்.

மேலும் விவசாயிகள் சந்தன மரப்பண்ணையை நேரடியாக பார்க்க முடியும். இக்கருத்தரங்கில் விவசாயிகள் பங்கேற்று பலன் பெறலாம். பயிற்சியில் பங்கேற்க 94425 90079, 94425 90081 என்ற எண்களைத் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளவும். மரம் சார்ந்த விவசாயம் குறித்து கூடுதல் தகவல்களுக்கு 80009 80009 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என ஈஷா அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்